சாதிப்பார்ப்பது தேவதூஷணம்
SAY NO TO CASTEISM சாதிப்பார்ப்பது தேவதூஷணம்
சாதிப்பார்ப்பது தேவதூஷணம்
அண்மையில் ஆசிரியர் டீ செல்வராஜ் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ”தோல்” என்ற நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். மிருக தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் பற்றி இப்புத்தகம் மிகத் தெளிவாக விவரிக்கிறது. இவ் நாவலில் ஒரு பகுதியில் சில கதாபாத்திரங்கள் இவ்வாறு உரையாடுகிறது,
”பொணம் இந்த வழியா போனா, ஊரே தீட்டுப்பட்டுப போவும், நாங்க கும்பிடுற சாமி எல்லா, ஊரை விட்டு ஓடிப் போயிரும் ஆத்தா! எங்களை எல்லாம் பழிவாங்கிப்போடும் என்றார்கள்….மேல்சாதி என்று தங்களை சொல்லிக் கொள்ளும் மக்கள். தமக்கு கீழ் வேலை செய்யும் ஏழையின் உடலை அடக்கம் செய்ய பாதை தர மாட்டோம் என்று கோபமாக கத்துகிறார்கள், மேல் சாதி என தங்களை அழைக்கும் மனித மிருகங்கள். மழையின் காரணமாக மற்ற பாதையில் போக முடியாத நிலையில், மனித உடலை சுமந்த வண்ணம் பாதைக்காக மக்கள் காத்துக்கிடக்கிறார்கள் ஏழை ஜனங்கள்.
இன்றும் எங்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளும், தீண்டாமை
கொடுமைகளும் காணப்படுகின்றன.
மனிதனே மனிதனை பிரித்து வைத்திருக்கின்றான்,
நான் உயர்ந்தவன் – நீ தாழ்த்தப்பட்டவன்
நான் முதலாளி – நீ தொழிலாளி
நீ எங்கள் ஊருக்குள் வரக்கூடாது
நீ எங்கள் ஆலயத்திற்கு வரக்கூடாது
நீ எங்கள் அடிமை
நீ படிக்கக்கூடாது
நீ வாழ்நாள் முழுவதும் இந்த தொழிலே செய்ய வேண்டும்.
மனிதனே மனிதனை இன்றும் சாதி, மொழி, மதம், தோல் நிறம், இனம் என பல காரணங்களுக்காக பிரித்து வைத்திருக்கிறான்.
மனிதன் மனிதனை பிரித்து வைத்தாலும், மனிதனை படைத்த கடவுள் மனிதரை தமது ஒரே சாயலிலேயே படைத்தார்
தொடக்கநூல் 1: 27
''கடவுள் தம் உருவில் மனிதரை படைத்தார்,கடவுளின் உருவிலேயே அவர்களை படைத்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.'' கடவுள் தமது சாயலிலேயே நம்மை படைத்தார்.''
எம்மத்தியில் பிறப்பில் பாகுபாடுகள் இல்லை, நாம் அனைவரும் சமம். கிறிஸ்துவின் பிள்ளைகளாக இவ் உண்மையை நாம் உணர்ந்தால் எம்மிடையே பிரிவுகளும், பாகுபாடுகளும் வராது.மனிதன் தனது லபாதிற்க்காகவும், தேவைக்காகவும் மனிதனை பிரித்து ஆளுகிறான். தீண்டாமை ஒரு நோயை போன்றது, அதை தனது வாழ்வில் பயன்படுத்துபவன் ஒரு நோயாளி, நான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்த்தவன் என்று சிந்திப்பவன் ஒரு மனநோயாளி. இவ்வார்த்தைகளை உண்மையானவை, நமது ஆலயங்களிலும், இன்னும் பல இடங்களிலும் இவ்வாறான சிந்தனையுள்ள மனநோயாளிகள் காணப்படுகின்றனர்.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்
இவ்வாறானவர்கள் கடவுளின் வார்த்தையை அறியாதவர்கள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள். உருவத்திலும், உடையிலும் சிறப்பானவர்களாக தோன்றினாலும் அவர்கள் உள்ளே இருப்பது அழுகிப்போன கீழ்த்தரமான இவ் சிந்தனைகளே. அவர்கள் கடவுளின் கோபாக்கினைக்கு ஆளாகுவார்கள், தன் கண்முன் வாழும் சகோதரனை, சகோதரியை மதிக்காத, அன்பு செலுத்தாத, மனிதன் எவ்வாறு காணாத கடவுளை வழிபடுவான் ? அவன் மனிதன் என்று அழைக்க தகுதியற்றவன்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டு,ஓரங்கட்டப்பட்டு, உடைக்கப்பட்ட அனுபவத்தை உடைய இயேசு இன்றும், எமது சமுதாயத்தில் ஒடுக்கப்படுபவர்களின் வேதனைகளை அறிந்தவராய் இருக்கிறார். அதனாலேயே அவரது வாழ்வில் இவ்வாறான அனுபவத்தில் இருப்பவரோடு அவர் பழகினார்,உணவு உண்டார்,பயணித்தார், அவர்களோடு வாழ்ந்தார்.
இயேசுவின் பிள்ளைகள் என மார்தட்டும் நாங்கள், இயேசுவின் வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றோமா? அவர் செய்த சிறு விடயங்களையாவது செய்ய முயற்சிக்கிறோம்? அவரின் வார்த்தையாலும் செயலாலும் அவர் காண்பித்த காரியங்கள் அன்பின் உச்சகட்டங்கள். கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய எம்மிடையே சாதி பிரிவுகள் வேண்டாம்.
பவுலடியார் கலாத்தியர் புத்தகத்தில் 3: 28 இவ்வாறு கூறுவதுபோல,
'இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.''
கிறிஸ்துவோடு இணைத்துள்ள நாம் ஒன்றாய் இருக்கிறோம். நாம் யாவரும் கடவுளின் பார்வையில் சமம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையாக கடவுளை நேசிப்பவர், தனது அயலனாயும் நேசிப்பார்,
நான் கடவுளை உண்மையாக நேசிக்கிறேனா?

Comments
Post a Comment